செய்திகள்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய மாணிக்கம் உதயகுமார் கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அல்மேடா, மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.நல்லதம்பி, மூத்த கலைஞர் மு.கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு நடனமாக உலகநாச்சியார் நாட்டுக்கூத்து ஆடப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் மண்முனைப்பற்றின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் சிகரம் என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் மண்முனைப்பற்று பிரதேசத்தில் கலைத்துறை, இலக்கியதுறை மற்றும் வைத்திய துறைக்கு பங்களிப்பு செய்த ஐந்து கலைஞர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கலாசார விழாவினையொட்டி கலைக்கழகங்கள்,மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின்போது கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றமை சிறப்பம்சமாகும். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மண்முனைப்பற்று வயோதிபர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியொன்று (14) திகதி முன்னெடுக்கப்பட்டது.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஸ்.எப்.அல்மேடா அவர்களது தலைமையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியானது பிரதான வீதி வழியாக பாலமுனை சந்தி வரைக்கும் சென்று மீண்டுமாக திரும்பி வைத்தியசாலையினை சென்றடைந்தது.
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் அவர்களது தலைமையிலான உத்தியோகத்தர்கள், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையிலான உத்தியோகத்தர்கள் அடங்களாக பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பொதுமக்களுக்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வைத்திய ஆலோசனைகள் அடங்கிய கையேடுகள் என்பன இலவசமாக விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








சர்வதேச முதியோர் வார விழா 2018 மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று 23.10.2018 செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதிப்பிற்குரிய மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சதர்சினி சிறிகாந்த் அம்மணி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.எஸ்.மகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் கௌரவ அதிதிகள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களினால் முதியோர் தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றதுடன், கதிரவன் கலைக் கழகத்தின் விஷேட பட்டிமன்றம் மற்றும் முதியோர்களால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியும் இதன்போது அரங்கேற்றப்பட்டது.
எமது பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள் மூவர் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களை ஒன்றினைத்து வட கீழ் பருவகால காலநிலைக்கு தயார்படுத்தலுக்கான கலந்துரையாடல் 22.10.2018 திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக உதவிப் பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.







எமது பிரதேச செயலகத்தில் வாணி விழா விசேட பூஜை இன்றைய தினம் (19) பிரதேச செயலக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள விநாயகர் ஆலய வளாகத்தில் மிகச் சிறப்புற நடைபெற்றது.
எமது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் அவர்களது பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது எமது செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
பூஜைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் உத்தியோகத்தர்களின் பஜனையும், அதனைத் தொடர்ந்து அறநெறி மாணவர்களின் அழகிய நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

























