News
ஆரையம்பதி மாற்றுத்திறனாளிகள் சமூக உள்வாங்கல் அமைப்பின் சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு YMCA நிறுவன உதவியுடன் 2024.01.23 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் அவர்களால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா நிகழ்வானது 2024.01.19 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் வயல் அறுவடை பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கிளை ரீதியான பல வகையான பொங்கல் பானைகள் நிகழ்வை அலங்கரித்தன.ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்த மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு திரு. மகேந்திரராசா ரஜீவன் அவர்களின் ஆன்மீக உரையுடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மனோரஞ்சனி ஜெயச்சந்திரன், கணக்காளர் திரு வல்லிபுரம் நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் திரு சின்னத்துரை திவாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து மாவிலங்கதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ பத்திரகாளியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள், உடுக்கு இசை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உழவர் பாடல், கிராமிய பாடல் என பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந்நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை பகுதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகம், முதியோர் சங்கம், மீனவர் சங்கம், ஹெயார் நுன்நிதிச் சங்கம் என பல அமைப்புக்கள் இணைந்து ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.





















